கரூர் காவல்துறை மீது தவெகவினர் கடும் அதிருப்தி!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுவரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நாளை (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், விஜய் பிரசாரம் செய்யும் இடம் இன்று காலை வரை இறுதி செய்யப்படவில்லை. அதனால் காவல்துறை மீது தவெகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்காக iடை; ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, கரூர் பேருந்து நிலைய மனோகரா ரவுண்டானா ஆகிய 3 இடங்களில் ஒன்றை ஒதுக்குமாறு காவல்துறையினரிடம் தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது.

லைட் ஹவுஸ் கார்னர் இடத்தை ஒதுக்குவதாக காவல்துறை சார்பில் முதலில் தெரிவிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தை ஒதுக்க இயலாது என காவல்துறை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, இடத்தை தேர்வு செய்து அனுமதி பெறுவதற்கா தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த கரூர் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு அளித்தார். அதில், விஜய் பிரசாரம் செய்ய லைட் ஹவுஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.

ஆனால், பிரசார கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை, வாகனங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கூறினால் மட்டுமே அதற்கேற்றவாறு இடம் ஒதுக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் கேட்டுள்ள விவரங்களை நிர்வாகிகள் மூலமாக அளிப்பதாகக் கூறிவிட்டு புஸ்ஸி ஆனந்த் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஆனால், விஜய் பிரசாரம் செய்யும் இடம் இன்று காலை வரை இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் நின்றவாறு பேசுவதற்கு விஜய்க்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவ்வாறு ஒதுக்கப்படுமாயின், நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் பரமத்தி வேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிற்பகல் 3 மணிக்கு விஜய் பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.