பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் வினோத் என்பவருக்கு பேரீச்சம் பழங்களில் சிலவற்றில் கொட்டைகளை நீக்கி, அதற்குப் பதிலாக கஞ்சாவை வைத்து கொடுக்க முயன்ற அவரது தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நெல்லை அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வினோத் ஏற்கெனவே போதைப் பொருள் வழக்கில் கடையம் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த மார்ச் முதல் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், சிறையில் இருக்கும் வினோத்தை பார்க்க அவரது தாய் லலிதா வந்துள்ளார்.
கைதிக்கு கொடுக்க அவர் கொண்டு வந்திருந்த பிஸ்கட், கடலைமிட்டாய், ஊறுகாய் மற்றும் பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருள்களை, சிறை விதிகளின்படி, சிறைக் காவலர்கள் சோதனை செய்தனர்.
தலைமைக் காவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இச் சோதனையில், பேரீச்சம்பழங்களில் சிலவற்றில் கொட்டைகள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக 3 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறை அலுவலர் முனியாண்டி, அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் காவல் நிலைய போலீஸார், தடை செய்யப்பட்ட பொருளை மறைத்து கொண்டுவந்து சிறைக்குள் கடத்த முயன்ற குற்றத்திற்காக, லலிதா மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சிறைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Comments are closed.