ஆளும் திமுக அரசு, தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என தவெக தலைவர் விஜய் விமரிசித்துள்ளார்.
திருச்சியில் செப்டம்பர் 13-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கு திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அனுமதி பெறுவதற்காக தவெக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் செப்.6ஆம் தேதி திருச்சி வந்தார்.

அப்போது, திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள விநாயகர் கோயிலில் புஸ்ஸி ஆனந்த் தரிசனம் செய்துள்ளார். அப்போது சாலையில் அதிக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதாகக் கூறி, தவெக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த், திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட 6 பேர் மீது திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கு தவெக தலைவர் விஜய், தனது எக்ஸ் தள பதிவில், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்கள் மீதும், கட்சியினர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
தேர்தல் பிரசார பயணம் என்பது அனைத்து கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.
தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒருபகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தவெகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என்.ஆனந்த் மீதும் தவெகவினர் மீதும் பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ என அப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.