தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக ஜி.வெங்கட்ராமன் இன்று (ஆக.31) பொறுப்பேற்றார்.
தமிழக காவல்துறை இயக்குநராகவும், சட்டம்-ஒழுங்கு டிஜிபியாகவும் இருந்த சங்கர் ஜிவால் இன்று ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக இருக்கும் வெங்கட்ராமன் கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார்.
நாகப்பட்டடினத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், 1968ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி பிறந்தவர். இளநிலை பொருளாதார பட்டப்படிப்பும், முதுநிலை பொதுநிர்வாகம் மற்றும் மேலாண்மை பட்ட மேற்படிப்பும் படித்துள்ள வெங்கட்ராமன், 1994ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார்.

தமிழக காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையில் டிஐஜி, ஐஜி பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார். அதன் பின்னர், சிபிசிஐடி, சைபர் குற்றப்பிரிவு ஏடிஜிபி பொறுப்புகளிலும் பல்வேறு முக்கியமான வழக்குகளில் துப்பு துலக்கி தீர்வு கண்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற வெங்கட்ராமன், நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்தார். சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்புடன், தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் பணியையும் வெங்கட்ராமன் கவனிப்பார்.

Comments are closed.