திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே ஒரு அடிதடி வழக்கு தொடர்பாக விசாரிக்கச் சென்ற சண்முகவேல் (52) என்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலைப்பேட்டை வட்டம் குடிமங்கலம் பகுதியில் மூங்கில் தொழுவு கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கி பணிபுரிந்துவரும் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, தங்கபாண்டியன் தனது தந்தையை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் அவசர உதவி எண் 110க்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில், அப்பகுதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் சம்பவ இடத்துக்குச் சென்று, மோதலைத் தடுத்து, காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். உடனிருந்த ஓட்டுநரையும் வெட்டுவதற்காக தங்கபாண்டியன் துரத்திய நிலையில், அவர் அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்துக்குச் சென்று தகவல் கொடுத்துள்ளார். ஆனால், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் சண்முகம் பரிதாபமாக இறந்துவிட்டார். அவரது உடலை காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய தங்கபாண்டியனைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

Comments are closed.