ஜாதியும் மதமும் தான் இங்கு அரசியலை தீர்மானிக்கிறது : சீமான்

ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியலை தீர்மானிக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, நெல்லை இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், படித்த பிள்ளைகளிடம் இப்படி ஒரு உணர்வு இருக்கிறது என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.

“கல்வி அறிவை போதிக்கவில்லை. அறத்தை போதிக்கவில்லை. வாழ்க்கை நெறியை போதிக்கவில்லை” எனக் குறிப்பிட்ட சீமான், கல்வி வியாபாரம் ஆனதால், அந்த சிந்தனை அப்படியே இருப்பதாகவும், மறைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

படித்தவர்கள் எல்லாம் அதை கடந்து வருவார்கள் என்று சொல்வார்கள். ஜாதி, மத உணர்ச்சி கடந்து, பேரன்பு கொண்டவனாக வருவான் என்பதற்கு புராணங்கள், தத்துவங்கள் எல்லாம் உருவாக்கப்படுகிறது. இதைவிடக் கொடுமை, பள்ளி மாணவர்கள் ஜாதி வெறியுடன் வெட்டிக் கொண்டது, அதே நிலத்தில் நடந்ததுதானே? பிஞ்சு நெஞ்சுக்குள் நஞ்சு விதை விதைக்கப்படுகிறது என்றார் சீமான்.

ஜாதியும் மதமும் தான் இங்கு அரசியல் செய்கிறது. இந்தியா முழுவதும் இதே நிலைமைதான் எனக் கூறிய சீமான், நாட்டின் உள்துறை அமைச்சர் மதுரையில் பேசும்போது இந்து மக்களின் ஒற்றுமை என்று பேசுகிறார். இந்திய மக்களின் ஒற்றுமை என அவர் பேசியிருக்க வேண்டும் என்றார்.

ஒரு குறிப்பிட்ட சமயம், மதம் சார்ந்தவர்கள் மீது வெறுப்பை கொட்டுவதே தங்களது அரசியல் என இருந்தால், எப்படி நாடு சரியாக இருக்கும் என சீமான் கேள்வி எழுப்பினார். இங்கு மதமும் ஜாதிய உணர்ச்சியும் தான் அரசியலை தீர்மானிக்கிறது என சீமான் தெரிவித்தார்.

Comments are closed.