முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சிலை அமைக்க அனுமதி கேட்டு தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வள்ளியூரில் காய்-கனி சந்தை நுழைவாயில் அருகே, கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் பெயர்ப் பலகை அமைக்க வள்ளியூர் பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
எம்எல்ஏவின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அச் சிலையை நிறுவுவதற்கான ஒப்புதலையும் அரசிடம் இருந்து பேரூராட்சி பெற்றது. இந்நிலையில், கருணாநிதிக்கு சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பால்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கருணாநிதி சிலை அமைக்க அனுமதி மறுத்ததோடு, பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் பிற சிலைகளை அகற்றவும் உத்தரவிட்டது.
இவ்வுத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இம் மனு மீதான விசாரணை, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நேற்று (செப்.22) விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார்.
மூத்த வழக்கறிஞர் வில்சன்
மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“ஒரு தலைவரின் புகழைப் பரப்ப நிறுவப்படும் சிலை, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதியே, சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே, அவ்வுத்தரவில் தலையிட விரும்பவில்லை,” என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

Comments are closed.