தமிழகத்தில் இணை அரசாங்கம் நடத்தும் ஐஏஎஸ் அதிகாரிகள்: உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவதாகவும், அது துரதிர்ஷ்டவசமானது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு சாகித்ய அகாடமி போன்ற உயரிய இலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகள் வழங்குவதற்காக ‘கனவு இல்லம்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத் திட்டத்தின்கீழ் பிரபல எழுத்தாளரும் தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.


பின்னர், அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. அதை எதிர்த்து திலகவதி, மறைமலை இலக்குவனார் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீடு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது.

இந் நிலையில், தமக்கும் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அம் மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, திலகவதிக்கு ஒதுக்கீடு செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கவிஞர் வைரமுத்து தரப்பில் வாதிடப்பட்டது.

அதைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது ஐஏஎஸ் அதிகாரிகள் செயலாகும். ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்தார்.

எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வது என்பது உணர்வுப்பூர்வமான விஷயம். இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது என்றார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

அவர்கள் (ஐஏஎஸ் அதிகாரிகள்) அதிகாரத் தொணியில்தான் பேசுவார்கள். கருணாநிதி இருந்திருந்தால் இதை அனுமதித்தே இருக்க மாட்டார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

Comments are closed.