வேறு ஜாதிப் பெண்ணை காதலித்ததற்காக நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின் செல்வகணேஷின் உடலைப் பெற 5 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது,
இன்று மாலைக்குள் இறுதிச் சடங்கு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ டி ஊழியரான கவின் செல்வகணேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இக் கொலையைச் செய்த அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோருக்கு இக் கொலையில் தொடர்பு இருப்பதாக புகார் தெரிவித்த கவினின் பெற்றோர், அவ்விருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்வரை உடலைப் பெற மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, சுர்ஜித்தின் பெற்றோரை இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக எப்ஐஆரில் சேர்த்தனர் போலீஸார். வழக்கின் விசாரணை காரணமாக அவ்விருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கவின் கொலை வழக்கு விசாரணை கடந்த புதன்கிழமையன்று சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அன்றிரவே சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.
சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என கவினின் உறவினர்கள் கோரிவந்த நிலையில், உடலைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர்களிடம் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 5 நாள்களுக்குப் பிறகு கவினின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கவினின் உடல் இவரது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

Comments are closed.