தஞ்சாவூர் எஸ்.பி. மற்றும் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
புகார் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கதல் செய்வதை உறுதிசெய்யத் தவறிய தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ராஜாராம் மற்றும் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் பதிவான வழக்கு ஒன்றில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி வேல்முருகன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் புகார் விசாரித்து முடித்து வைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. புகார்தாரருக்கும் இதுகுறித்து போலீஸார் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புகாரை முடித்து வைப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புகார்தாரருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். இதை செய்ய தவறியது செயல் நடைமுறை குளறுபடி. எனவே, வழக்கு முடித்து வைக்கப்பட்ட 2017 முதல் இதுவரை குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்த 11 பேருக்கு எதிராக டிஜிபி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
அதோடு, இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா என்பதை கண்காணிக்க தவறிய, எஸ்பி.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2015 முதல் இதுவரை கடலூர் மாவட்ட எஸ்பி.யாக பதவி வகித்த நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் பி.சரவணன், எம். ஸ்ரீஅபினவ், எஸ்.சக்தி கணேசன், எஸ்.ஜெயக்குமார் மற்றும் தற்போதைய தஞ்சை மாவட்ட எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

Comments are closed.