தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
தவெக தலைவர், நடிகர் விஜய் நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். விஜய்யை காண தொண்டர்கள் நாகப்பட்டினத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.
கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, தவெக தொண்டர்கள் உயரமான கட்டடங்கள், மரங்கள் மற்றும் மின்விளக்கு கம்பங்களில் ஏறியதால் பிரச்சனை ஏற்பட்டது.
எனவே, விஜய் வருகை மற்றும் புறப்படும்போது அவரின் வாகனத்துக்கு பின்னால் தொண்டர்கள் வரக்கூடாது, உயரமான இடங்களிலும், அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் மீதும் ஏறக்கூடாது என தவெக தரப்பில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாரின் கோரிக்கையை ஏற்று, விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள புத்தூர் ரவுண்டானா பகுதியில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.