புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தை கைது செய்வதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் புஸ்ஸி ஆனந்தை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

முதல்கட்டமாக, கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏற்காட்டில் உள்ள மலைக் கிராமத்தில் அவர் தங்கியிருப்பதாக வெளியாகிருக்கும் தகவலைத் தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக காவல்துறை ஐஜி ஜோஷி நிர்மல் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்காடு மட்டுமின்றி, சென்னையிலும் ஆனந்தை தேடும் பணியை காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

இதனிடையே, ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.