பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளத்தைச் சேர்ந்த இளைஞர் ஜெகதீசன். வயது 20. இவர் பாடாலூர் அரசு மாதிரி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவியை புதன்கிழமை மதிய இடைவேளையில் கடத்திச் சென்று, பாடாலூரில் உள்ள தனது வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், இரவு 11 மணிக்குப் பிறகு அம் மாணவியை பாடாலூர் சந்தையில் விட்டுச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெகதீசனை வியாழக்கிழமை கைது செய்தனர். பின்னர், அவரை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Comments are closed.