வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த பெண் அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
அசாம் மாநில கோலாகட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நுபுர் போரா. கடந்த 6 ஆண்டுகளாக அரசுப் பணியில் இருக்கும் அப் பெண் அதிகாரி வருமானத்துக்கு அதிகமாக சொத்து மற்றும் பணம் சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அவரை கடந்த ஆறு மாதங்களாக கண்காணித்து வந்ததாக முதல்வர் ஹிமாந்தா பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அப் பெண் அதிகாரியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அதில், அவர் வசிக்கும் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.1 கோடி பெறுமான தங்க நகைகள் மற்றும் ரூ.92 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து நுபுர் போராவை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவரது உதவியாளர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
1989ல் பிறந்த நுபுர் போரா, கவுஹாத்தி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பட்டம் பெற்றவர். துவக்கத்தில் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
பிறகு அசாம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 2019ல் அரசு அதிகாரியாக தேர்வானார். முதலில் கர்பி அங்லோங் என்ற இடத்தில் துணை கமிஷனராக பணியைத் துவக்கினார். இப் பதவியில் மார்ச் 2019 முதல் ஜுன் 2023 வரை பணிபுரிந்தார். அதன் பின்னர், அவர் பார்பெட்டா சர்க்கிள் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து கம்ரூப் என்ற இடத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

Comments are closed.