தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் : விஜய்

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.21ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்களரசியல் இயக்கமான தவெக மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்பட போகிறது என்றும், நமது கனவு நனவாக, இலக்கை எட்ட, புரட்டிப் போடப்போகும் புரட்சி நிகழ இன்னும் சில மாதங்களே உள்ளன என்றும் அக்கடிதத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தவெக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப்போவது நிஜம்.

உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்.

உங்கள் விஜய், உரிமையுடன் அழைக்கிறேன். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்;தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்” என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார் விஜய்.

Comments are closed.