தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை அருகேயுள்ள பாரபத்தியில் இன்று மாலை நடைபெறுவதையொட்டி, இம் மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த இரு நாள்களாக மதுரையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அக்கட்சித் தொண்டர்களின் வருகையால் மதுரை மாநகரம் குலுங்கியது.
அதிலும் குறிப்பாக, மாநாட்டிற்கு வந்துள்ள த.வெ.க.வினர் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள கோவில்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், முருகப் பெருமானின் முதல் படை வீடான பிரசித்திபெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோயில், பிரசித்தி பெற்ற மலைவாசஸ்தலமான அழகர்கோயில் ஆகியவற்றில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

தரிசனம் முடிந்து வெளியே வந்த த.வெ.க.வினர் கோவிலுக்கு முன்பாக நின்று ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் பல்வேறு ஊர்களிலிருந்து வேன் மற்றும் கார்களில் வந்த தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு செல்லாமல் நேராக திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு அதன் பின்னரே மாநாடு நடைபெறும் இடத்துக்கு செல்கின்றனர்.
திருப்பரங்குன்றம் கோவிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 நாள்கள் மண்டல பூஜை நடைபெற்றுவரும் நிலையில் நாள்தோறும் உள்ளுர் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், த.வெ.க.வினரும் சாமி தரிசனம் செய்ய குவிந்ததால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான த.வெ.க தொண்டர்கள் இன்று அதிகாலை முதல் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அம்மன் சன்னதி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அதேபோல, பிரசித்திபெற்ற மலை வாசஸ்தலமான அழகர் கோவிலிலும் தவெகவினர் அதிக அளவில் காணப்பட்டனர். அங்கு மலைமேல் உள்ள சோலைமலை முருகன் கோவில், கள்ளழகர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாநாட்டு திடலுக்குச் செல்கின்றனர்.

Comments are closed.