தான் எதற்கு முதல்வர் ஆனோம் என்பதையே மறந்துவிட்டு முழுநேர சினிமா விமரிசகராக மாறிவிட்டார் இன்றைய முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்தபோது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால் இந் நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது. திரைப்படங்கள் பார்ப்பதிலோ, திறமையான திரைப்படக் குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை.
ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம் என்பதையே மறந்துவிட்டு முழுநேர சினிமி விமரிசகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது. ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா?
ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்கதான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது. தென் தமிழகம் மழையில் மிதந்தபோது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர்தானே நீங்கள்?
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின்போது கூலி திரைப்படம் பார்;த்தவர்தானே நீங்கள்? அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப்போய், தாங்கள் உழைத்துப் பயிரிட்ட விவசாயிகளின் துயர் பற்றி கொஞ்சங்கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா? அது சரி, விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய உங்களுக்கு நேரம் இருக்காது தான்.
விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இக் குடும்ப மன்னராட்சியாளரகளுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.