விபத்து வழக்கில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ உள்பட இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சி கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார், செப்டம்பர் 14ஆம் தேதி தொம்பரம்பேடு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பைக்கில் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில், அஜித்குமார் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
இவ்விபத்து குறித்து விசாரித்த ஊத்துக்கோட்டை எஸ்எஸ்ஐ பாஸ்கர், விபத்து ஏற்படுத்திய காரை திருவள்ளுர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குக்கு கொண்டு செல்ல ரூ.10,000 லஞ்சம் வேண்டுமென அஜித்குமாரிடம் கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத அஜித்குமார், இதுகுறித்து திருவள்ளுர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரையின்படி, எஸ்எஸ்ஐ பாஸ்கருக்கு ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுக்க அஜித்குமார் நேற்று காவல் நிலையம் சென்றார். அப்போது பாஸ்கர் அங்கு இல்லை.
அவரை மொபைலில் தொடர்பு கொண்டபோது, தான் வெளியே இருப்பதாகவும், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் சுகுமாரிடம் பணத்தை கொடுக்குமாறும் எஸ்எஸ்ஐ பாஸ்கர் கூறியுள்ளார். அதனால், ரசாயனம் தடவிய பணத்தை சுகுமாரிடம் அஜித்குமார் கொடுத்தார்.
அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீஸார், சுகுமாரை கையும் களவுமாக பிடித்து அப் பணத்தை கைப்பற்றினர். அவரைத் தொடர்ந்து, எஸ்எஸ்ஐ பாஸ்கரும் கைது செய்யப்பட்டார். இருவரும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments are closed.