அரசுப் பேருந்தை திருடிச் சென்ற ஒடிசா இளைஞர்!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரசுப் பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக, ஒடிசாவைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல இருந்த இப் பேருந்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அப் புகாரின்பேரில், கோயம்பேடு காவல் நிலைய போலீஸார் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டு பேருந்தை பிடித்து வைத்துள்ளதாக ஆந்திர மாநிலம் நெல்லூர் போலீஸார் கோயம்பேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோயம்பேடு போலீஸார் நெல்லூர் சென்று பேருந்தை மீட்டதுடன், பேருந்தை கடத்திச் சென்ற ஒடிசாவைச் சேர்ந்த ஞானராஜன் சாகு (24) என்ற இளைஞரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பேருந்து நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின்பேரில், கோயம்பேடு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஞானராஜன் சாகுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.