மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே அமைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் சிலையை அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் நேற்று நள்ளிரவு சேதப்படுத்தியுள்ளனர்.
எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையை அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் நேற்று நள்ளிரவு சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர் அப்பகுதியில் திரண்டு, சிலையை சேதப்படுத்திய நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இச் சம்பவம் குறித்து அவனியாபுரம் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இச் சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புரட்சித் தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.

சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும், அவரது புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இச் செயலைச் செய்து பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.