அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சூரியமூர்த்தி என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை சென்னை நீதிமன்றம் திரும்ப பெற்றது.
இதன்மூலம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்;த்தும் சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
கட்சியின் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அம் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்விழக்கை நிராகரிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாலாஜி, உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கில் தங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாதென சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை மறைத்து, தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என சூரியமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன் வாதிட்டார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும், வழக்கை நிராகரிக்க மறுத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Comments are closed.