15 ஆண்டுகளாக திருடி வரும் திமுக ஊராட்சி மன்றத் தலைவி!

திருடும்போது கிடைக்கும் ‘மகிழ்ச்சிக்காக’ கடந்த 15 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவதாக சங்கிலி திருட்டு வழக்கில் கைதாகியுள்ள திமுக ஊராட்சி மன்றத் தலைவி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் வரலட்சுமி. வயது 50. இவர் சில தினங்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் சென்னை திரும்பியபோது அவரது 5 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் திருடியுள்ளார்.

அவரது புகாரின்பேரில், கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவியில் பதிவான காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில், வரலட்சுமியின் நகையைத் திருடிய திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பாரதி (வயது 51) என்ற பெண்ணை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதற்கு காரணம், கைது செய்யப்பட்ட பாரதி திமுகவைச் சேர்ந்தவர் என்பதும், அவர் தான் நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் என்பதும் ஆகும்.

இந்நிலையில், திருடும்போது கிடைக்கும் ஒருவகையான ‘கிக்’ மற்றும் சந்தோசத்திற்காக கடந்த 15 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவதாக ஊராட்சி மன்றத் தலைவி பாரதி அளித்த பகீர் வாக்குமூலத்தைக் கேட்டு போலீஸார் மேலும் அதிர்ந்தனர்.

 


போலீஸாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:

நான் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி என பல இடங்களில் பேருந்துகளில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை திருடியுள்ளேன்.

நல்லவள் போல குழந்தைகளிடம் பேச்சு கொடுத்து, நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளேன். கடந்த 15 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். திருடிய நகைகளை விற்று கிடைத்த பணத்தில் சொந்த ஊரில் வணிக வளாகம் கட்டியுள்ளேன்.

ஊராட்சி மன்றத் தலைவியான பின், திருட்டு தொழிலை விட்டுவிடும்படி உறவினர்கள் கூறினர். திருடும் பழக்கத்தை என்னால் விட முடியவில்லை. பணம், புகழ், வசதிகள் வந்த பின்னரும், திருடும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக இத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

‘இனி திருடவே கூடாது’ என ஒவ்வொரு நாளும் சபதம் எடுப்பேன். ஆனால், திருடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் தோற்று விடுவேன். என் திருட்டு பழக்கத்தால் கூனி குறுகி நிற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என பாரதி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Comments are closed.