பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி நடிகை மீரா மிதுன் வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர், அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவ்விருவரும் 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீரா மிதுனுக்கு எதிராக 2022ஆம் ஆண்டு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த தனிப்படையும் அமைக்கப்பட்டது.
பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தில்லியில் உள்ள தனது மகள் மீரா மிதுனை மீட்கக்கோரி அவரது தாய் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தில்லியில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டு, தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, தில்லி காப்பகத்தில் உள்ள மீரா மிதுனை கைது செய்து வரும் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

Comments are closed.