கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவையில் நவ.2ஆம் தேதி இரவு கல்லூரி மாணவி கடத்தப்பட்டு, வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 3 பேரை சுட்டுப் பிடித்தனர். இச் சம்பவம் தொடர்பாக, போலீஸார் கூறியதற்கும், உண்மையில் நடந்ததற்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவியை 100 போலீஸார் தேடியதாகவும், அதன் பின் மீட்டதாகவும் கோவை போலீஸ் கமிஷனர் கூறினார். உண்மையில் அம் மாணவி அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குச் சென்று உதவி கேட்டுள்ளார்.
அவர்கள் மாணவியை மீட்டு, போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறை முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதை நாளிதழ்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன. எனவே, நடந்தது என்ன என்பதை முதல்வர் தெரிவிப்பாரா? காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.