கரூர் துயரச் சம்பவத்திற்கு மாவட்ட எஸ்.பி.தான் பொறுப்பு: எச்.ராஜா

கரூர் துயரச் சம்பவத்திற்கு பொறுப்பு அம்மாவட்ட எஸ்.பி.தான். அவர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. இப்பிரச்சினையில் திமுக அரசு இப்பிரச்சினையில் நாடகமாடுகிறது என பாஜகவின் முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிவகங்கையில் நடைபெற்ற பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:

கரூரில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் விலைமதிப்பற்ற 41 உயிர்கள் பலியாயின. இதற்கு மாநில அரசின் நிர்வாக சீர்கேடுகள் தான் காரணம். காவல்துறை, மாவட்ட நிர்வாகம் திமுகவின் குரல்களாக மாறிவிட்டன. இச் சம்பவத்திற்கு பொறுப்பு எஸ்.பி.தான். அவர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. திமுக அரசு இப்பிரச்சினையில் நாடகமாடுகிறது.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததே திமுக தான். அது தெரியாமல் முதல்வர் பேசுகிறார். திமுகவிற்கு அரசியல் நேர்மை கிடையாது.

நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 6,500 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகளும் நடைபெற்றுள்ளன.

திமுக அமைச்சர்கள் 15 பேர் ஊழல் வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மக்களை திசை திருப்பும் வேலையில் ஈடுபடாமல் மீதமுள்ள 6 மாதத்திலாவது ஒழுக்கமாக அரசை நடத்த வேண்டும்.

திமுக அணையப்போகிற விளக்கு. 2026 மே மாதம் திமுகவிற்கு இறுதி காலமாக இருக்கும் என்றார் எச்.ராஜா.

Comments are closed.